வியாழன், ஆகஸ்ட் 07, 2014

முதல் உலகப் போர் – நூறு ஆண்டுகளுக்குப் பின் (இறுதிப் பகுதி)

சென்ற இரண்டு பகுதிகளில் முதல் உலகப் போருக்கானக் காரணத்தையும் அதன் நிகழ்வுகளையும் பார்த்தோம். இப்போது இப்போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது என்று பார்ப்போம்.

ஆரம்பத்தில், அமெரிக்கா இந்தப் போரில் நடுநிலையை வகிப்பதாக அறிவித்தாலும், அது நேசநாடுகளுக்கு மறைமுகமாக உதவி வந்தது. அமெரிக்கா நேச நாடுகளுக்கு ஆயுதங்களையும் மற்ற சாதனங்களையும் வழங்கி வந்தது.  1915-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி பிரிட்டிஷ் பயணிகள் கப்பல் ஜெர்மனால் மூழ்கடிக்கப் பட்டதில், அதன் 1195 பயணிகளும் இறந்தனர். அவர்களில் 128 பேர் அமெரிக்கர்கள். இதனால், அமெரிக்காவும் போரில் ஈடுபடவேண்டும் என்று குரல்கள் எழும்பின. ஆனாலும், அமெரிக்க அதிபர் வூட்ரோ வில்சன் அமைதி ஏற்பட முயற்சிகள் எடுத்தார்.

ஆனால் 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெர்மன் பிரிட்டனுக்கு எதிராக கட்டுபாடற்ற நீர்மூழ்கி தாக்குதலை அறிவித்தது. இதன் மூலம் பிரிட்டனுக்கு வரும் அனைத்து கப்பல்களும் அது ராணுவ கப்பலாக இருந்தாலும் சரி பயணிகள் கப்பலாக இருந்தாலும் சரி அதை மூழ்கடிக்க முடிவெடுத்தது. தொடர்ந்த நிகழ்வுகளில் அமெரிக்க அதிபர் வில்சன் ஏப்ரல் மாதம் 3-ஆம் நாள், ஐரொப்பாவில் அமைதி திரும்ப தேவைபட்டால் அமெரிக்காவும் போரில் இறங்கும் என்று அறிவித்தார். ஏப்ரல் 6-ஆம் தேதி ஜெர்மனுக்கு எதிராக போர் அறிவிப்பை வெளியிட்டார்.

ஏற்கனவே மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து போர் புரிந்து கொண்டிருந்த இரு தரப்பினரும் சோர்ந்து போய் இருந்த நிலையில் அமெரிக்காவின் வரவு நேசநாடுகளுக்குப் புத்துணர்ச்சியை அளித்தது. மேலும், அமெரிக்க வரவினால் நேச நாடுகளுக்கு புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய ஆயுதங்களை பிரயோகிக்கக் கூடிய பொருளாதார பலத்தைக் கொடுத்தது. தொடர்ந்து போரில் பீரங்கி டாங்கிகளும் போர்விமானங்களும் பெருமளவில் உபயோகிக்கப் பட்டன.

ஜெர்மன் கிழக்கில் ரஷ்யாவுடன் பெரும் வெற்றி ஈட்டியிருந்தும் மேற்கில் அமெரிக்கப் படை நேச நாடுகளின் படையுடன் சேரும் முன்னர் அதை அழிக்கத் திட்டமிட்டது. அதன் ரஷ்ய வெற்றியின் நாயகனான கமாண்டர் எரிச் லுடெண்டார்ஃப் மேற்கு நோக்கி அனுப்பப்பட்டார். ஆரம்பத்தில் ஜெர்மன் வெற்றிகள் ஈட்டினாலும் அமெரிக்கப்படையின் வரவையொட்டி ஜெர்மன் படைகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

மெல்ல போரின் கோரத்தை மக்கள் உணர ஆரம்பித்தனர். மேலும், ஐரோப்பியா மக்களிடம் அரசியல் ரீதியாக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. மக்களிடம் முடியாட்சிக்கு எதிரான மனநிலை உருவாக  ஆரம்பித்தது. தொடர்ந்து ஜெர்மன் அரசருக்கு எதிராக மக்கள் போராட்டமும் வேலை நிறுத்தமும் செய்தனர்.  தொடர்ந்து 1918-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மனின் கடற்படை அரசுக்கு எதிராகத் திரும்பியது; கமாண்டர் லுடெண்ட்ராஃப் பதவி விலகினார். நவம்பர் 9-ஆம் தேதி ஜெர்மன் அரசர் இரண்டாம் கெய்சர் வில்ஹெம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

1918 அக்டோபர் 11-ஆம் தேதி இரு தரப்பின் தலைவர்களும் கூடிப் பேசி அமைதி ஒப்பந்தம் செய்ததைத் தொடர்ந்து போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

1919-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லாய்ட் ஜார்ஜ், இத்தாலியின் ஒர்லண்டோ, பிரான்ஸின் க்லெமென்க்யூ ஆகியோர் வுட்ரோ வில்சனுடன் கூடி ஐரோப்பாவில் அரசியல் நிலைத் தன்மையை மீட்கவும் ஜெர்மனி கொடுக்க வேண்டிய நஷ்ட ஈட்டையும் தீர்மானித்தனர்.

அதில் அமெரிக்க அதிபர் 14 அம்ச திட்டம் ஒன்றை அறிவித்தார். அவை...

 
திறந்த ராஜீய உறவு இதன் மூலம் முன்னர் இருந்தது போல் எந்த நாடும் ரகசிய ஒப்பந்தங்கள் செய்து கொள்ளக் கூடாது.
தடையற்ற கடற்பயணம் கடற்பகுதிக்கு எந்த நாடும் சொந்தம் கொண்டாடக் கூடாது.
ஆயுதக் குறைப்பு எல்லா நாடுகளும் தங்கள் ஆயுதங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
காலணி ஐரோப்பாவின் காலணிகளின் மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும்.
ரஷ்யா அது விரும்பிய அரசை அது தானே தீர்மாணிக்கவும் அதை மற்ற நாடுகள் அங்கீகரிக்கவும் வேண்டும்.
பெல்ஜியம் பெல்ஜியத்தில் போருக்கு முந்தய நிலை திரும்ப வேண்டும்.
பிரான்ஸ் போரில் ஜெர்மனால் கைப்பற்றப்பட்ட அதன் நிலங்கள் அதற்கு திரும்ப அளிக்கப்பட வேண்டும்.
இத்தாலி இத்தாலியின் எல்லை திருத்தி அமைக்கப்பட வேண்டும்.
நாடுகளின் சுய நிர்ணயம் ஐரோப்பிய நாடுகள் அதன் மக்களின் விருப்பப்படி சுய நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
ரொமானியா, மாண்டேநெக்ரோ, செர்பியா மற்ற நாடுகளின் படைகள் செர்பியாவிலிருந்து விலக்கப்பட்டு மத்திய தரைக்கடல் வரை அதன் எல்லை நீட்டிக்கப்பட வேண்டும்.
துருக்கி மக்களுக்கு அவர்கள் எதிர்காலத்தைத் தீர்மாணிக்க அனுமதி.
போலந்து தனி நாடாக இயங்க வேண்டும்.                                 
நாடுகளின் கூட்டமைப்பு அமைதியை நிலை நாட்ட அனைத்து நாடுகளின் கூட்டமைப்பு நிறுவப் பட வேண்டும்.
 
என்பவையே இதன் முக்கிய அம்சங்கள். இந்த திட்டத்தை முழுமையாக அனைத்துத் தரப்பினரும் ஏற்கவில்லை. உதாரணமாக, ஐரோப்பிய நாடுகள் சுயநிர்ணயம் செய்து கொள்ளலாம் என்பதை பிரான்ஸ் ஏற்க மறுத்தது. அது ஆஸ்த்ரியா ஜெர்மனியுடன் இணைந்தால் தன் இறையாண்மைக்கு அது ஆபத்து உண்டாக்கும் என்று எண்ணியது. பிற்காலத்தில் (ஹிட்லர்) அது உண்மையாகவும் மாறியது. சில அம்சங்களை அனைவரும் ஏற்காவிட்டாலும் ஒப்பந்தம் கிட்டத்தட்ட இந்த அம்சங்களின் அடிப்படையிலேயே செய்யப்பட்டது.

ஜெர்மனி நஷ்ட ஈடாக 6600 மில்லியன் பவுண்டுகள் தர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஜெர்மனியின் படை எண்ணிக்கை ஒரு லட்சமாகக் குறைக்கப்பட்டது. அது பீரங்கி டாங்கிகள் வைத்துக் கொள்ள அனுமதி மறுக்கப் பட்டது. அதன் கடற்படை 6 கப்பல்களைக் கொண்டதாக தீர்மாணிக்கப்பட்டது. அதன் விமானப்படை தடை செய்யப்பட்டது.

மேலும், அரசியல் ரீதியாக ஜெர்மனும் ஆஸ்த்ரியாவும் சேர தடை விதிக்கப்பட்டது. ஜெர்மனி கிழக்குப் பகுதியில் வென்ற அனைத்து பகுதிகளும் அதனிடமிருந்து பறிக்கப்பட்டது. அதன் பொறுப்பு நாடுகளின் கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆஸ்த்ரியா வென்ற நிலங்கள் இத்தாலிக்கும் செகோஸ்லோவாகியாவிற்கும் செர்பியவிற்கும் பிரித்து கொடுக்கப்பட்டது. ஹங்கேரியின் 2.80 லட்சம் ச.கி.மீ நிலம் செகோஸ்லோவாகியா, ரொமானியா, செர்பியா ஆகியவற்றிடம் கொடுக்கப்பட்டது. பல்கேரியாவின் நிலங்கள் க்ரீஸ், ரொமானியா, யுகோஸ்லேவியா ஆகியவற்றிடம் கொடுக்கப்பட்டது.

துருக்கி வென்ற பகுதிகள் க்ரீஸிடம் தரப்பட்டது. துருக்கியின் காலணிகள் நாடுகளின் கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், துருக்கியின் இந்த காலணிகளை பிரிட்டனும், பிரான்ஸும்

அரேபியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு தங்களுக்குள் பிரித்துக் கொண்டன.

போரில் தோல்வியுற்றதுமல்லாமல் ஆட்சி அதன் முந்தைய அரசரிடமும் இல்லாமல் இருந்ததால் ஜெர்மனி, துருக்கி, ஆஸ்திரியா போன்ற நாடுகள் இந்த ஒப்பந்தத்தை   வேறு வழியில்லாமல் ஏற்க வேண்டியிருந்தது.
நேச நாடுகள் சார்பில் 3 ½ கோடி வீரர்கள் இந்தப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். மத்ய நாடுகள் சார்பில் 2 ¼ கோடி வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்திகளைத் தவிர, 1917-ஆம் ஆண்டு அமெரிக்கா போரில் இறங்கிய போது அதன்  சார்பில் 45 லட்சம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

போரில் சுமார் 85 லட்சம் வீரர்கள் உயிரிழந்தனர். 2 ¼ கோடி வீரர்கள் காயமுற்றனர். 75 லட்சம் வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர் அல்லது காணாமல் போயினர்.

போரில் உபயோகப்படுத்தப்பட்ட நச்சு வாயுக்களால் 1919-ஆம் ஆண்டு ஐரோப்பியாவில் கடும் ப்ளூ ஜுரம் பரவியது. போரின் கோரத்தால் தான் இந்த ஜுரம் பரவியது என்பதை அரசாங்கங்கள் மறைத்து வந்தன. ஆனால், இந்தப் போரில் ஈடுபடாத ஸ்பெயின் இதில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைத் தாராளமாக வெளியிட்டது. தங்களின் தவறுகளை மறைக்க பிரிட்டனும் பிரான்ஸும் இதை ’ஸ்பெயின் ப்ளூ’ என்று கிண்டலடித்தன. தற்சமயம், நாம் அவ்வப்போது எதிர்கொள்ளும் பறவைக் காய்சல் என்ற ‘bird flu’  இந்தப் போரைத் தொடர்ந்து தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது.

போரைத் தொடர்ந்த 10-12 ஆண்டுகள் ஐரோப்பியா பெரும் உணவுப் பஞ்சத்தையும் அதனால் விலைவாசி ஏற்றத்தையும் சந்தித்தன.

சென்ற பதிவுகளில் கூறியது போல் முதல் உலகப் போரை பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் ஆதரித்து வரவேற்றார்கள் என்றே கூற வேண்டும். ஐரோப்பிய ஊடகங்களும் இந்தப் போரை ’எல்லா சச்சரவுகளையும் தீர்த்துவைக்கப் போகும் போர்’ என்றே நம்பினார்கள்.

இந்தப் போரினால் ஏற்படப் போகும் அழிவையும் அதன் கோரத்தையும் அவர்கள் எண்ணிக் கூடப் பார்க்கவில்லை.

இவையனைத்திற்கும் மெலாக போரில் தோல்வியுற்ற ஜெர்மனி தனிமைப் படுத்தப்பட்டதால் அதையே தன் அரசியலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஹிட்லர் அடுத்தொரு பெரிய போருக்கு அஸ்திவாரம் போடுவான் என்பதை யாராலுமே நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது.

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்ற பழமொழி எல்லாவற்றிர்கும் பொருந்தாது. போரைப் போரால் தடுக்க முடியாது.

இனியாவது பாரதி தாசன் கூறியது போல்…

 
புதியதோர் உலகம் செய்வோம்
         கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்… 

திங்கள், ஆகஸ்ட் 04, 2014

முதல் உலகப் போர் – நூறு ஆண்டுகளுக்குப் பின் (பகுதி 2)


முதல் உலகப் போரின் துவக்கத்தையும் அதன் பின்னணியையும் சென்ற பதிவில் எழுதியிருந்தேன்.

அந்த நிகழ்வுகள் பின்வருமாறு இருந்தன…           

ஜூன் 28-இல் ஆஸ்த்ரிய-ஹங்கேரியின் பட்டத்து இளவல் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் அதன் அரசரான83 வயதான முதலாம் ஃப்ரன்ஸ் ஜோசப், செர்பியாவிடம் ஆஸ்த்ரியாவிற்கு எதிரான குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இளவலின் கொலைவிசாரணையை நடத்தி முடிக்கவும் ஜுலை 23-ம் தேதி வரை கெடுவிடுத்தார். கெடுவையேற்ற செர்பியா குற்றவாளிகளை செர்பிய சட்டப்படி விசாரிக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை விதித்தது. இதனை ஏற்க மறுத்து ஜூலை 28-ஆம் தேதி ஆஸ்த்ரோஹங்கேரி, செர்பியா மீது போர் அறிவித்தது.

செர்பிய சட்டப்படி விசாரணையை ஏற்க வியன்னா மறுக்க காரணம் இருந்தது. போஸ்னியாவின் ஐந்தில் இரண்டு பேர் செர்பிய இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆஸ்த்ரோஹங்கேரியின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி சுதந்திரம் பெற்று செர்பியாவில் இணைய நினைத்தனர். கர்னல் ட்ரகுடின் டிமிட்ரிஜெவிக் தலைமையிலான கருங்கை இயக்கத்தைப் போல பல இயக்கங்கள் இதற்கான முயற்சிகளை வெளிப்படையாகவும் இரகசியமாகவும் செய்து வந்தன. 11 வெவ்வேறு இனக்குழுக்களைக் கொண்ட செர்பியாவும் ரஷ்யாவும் அவர்களுக்கு உதவுவதாக எண்ணியது.

ரஷ்யா போன்ற பெரிய நாடு செர்பியாவிற்குத் துணைவரும் என்பதை அறிந்திருந்தும் ஆஸ்த்ரோஹங்கேரி போரில் இறங்கக் காரணம் அதற்கு ஜெர்மனியின் அரசர் கெய்சர் வில்ஹெம் -2 உதவுவார் என்ற நம்பிக்கையே.

ஆஸ்த்ரிய அரசர் ஜோசபின் நம்பியபடியே ஜெர்மனி செர்பியா ஓர் அழிக்கப்பட வேண்டிய அரசியல் விஷயம் என்று அறிவித்தது. இரண்டாம் வில்ஹெம், ஆஸ்திரிய தூதரான கவுண்ட் வான் ஹோயஸ்-இடம் ஆஸ்த்ரியாவின் ’செர்பிய விஜயத்தி’னால் ரஷ்யாவுடன் போரிட நேர்ந்தாலும் தன் ஆதரவு உண்டு என்று அறிவித்தது.  

1890-இல் பிஸ்மார்க்-ஐ சான்சிலர் பதவியிலிருந்து கட்டாய ஓய்வில் அனுப்பியது முதல் வில்ஹெம் அதிகாரத்தை தன் வசம் நிலை நிறுத்த பல நடவடிக்கைகளை எடுத்தார். ஜெர்மனி ஐரோப்பாவில் முக்கிய சக்தியாக நிலைபெற  அதன் கடற்படையை சீரமைக்க வேண்டும் என்று எண்ணினார். அதிலிருந்து பிரிட்டன் ஜெர்மனியின் வளர்ச்சியை எண்ணி கவலைக் கொள்ள ஆரம்பித்தது. அதன் கடற்படை வளர்ச்சி மூலம் தங்களுக்கு ஆபத்து என்பதை பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூன்றும் உணர்ந்தன. ஜெர்மனியும் தனக்கு எந்த நிலையிலும் உதவக் கூடிய நட்பு நாடு என்றால் அது ஆஸ்த்ரியா தான் என்பதை உணர்ந்திருந்தது. ஆஸ்த்ரிய உதவியினால் கிழக்கிலிருந்து ரஷ்யப் படையெடுப்பை தடுக்கவும் மேற்கில் பிரான்ஸ் தாக்கினால் அதைக் கட்டுப்படுத்த ஷிலிஃபென் திட்டம் (ப்ரான்ஸை ஹாலந்து, லுக்ஸெம்பர்க், பெல்ஜியம் மூலம் தாக்குவது) உருவாக்கியிருந்தது. இது போன்ற ஒரு சம்பவத்திற்காகவே காத்திருந்தது.

ஆஸ்த்ரிய போர் அறிவிப்பைத் தொடர்ந்து அனைவரது கவனமும் ரஷ்ய ஜார் மன்னன் இரண்டாம் நிக்கலோஸ்-இன் பக்கம் திரும்பியது. ரஷ்யா செர்பியாவிற்கு உதவ எந்த ஒப்பந்தமும் செய்திருக்கவில்லை; அதேபோல், அதற்கு பால்கன் பகுதியினால் அதற்கு பெருமளவில் எந்த பொருளாதார நன்மையும் இல்லை. ஆனால், செர்பியா வழியாக  அதன் எதிரி துருக்கியைக் கைப்பற்றி கான்ஸ்டாண்டி நோபில் ஜலசந்தி மூலம் மத்தியதரைக்கடல் பகுதியை அணுக வாய்ப்பு கிட்டும். மேலும் அரசியல் காரணங்களுக்காக மேற்குப் பகுதியில் ஆஸ்த்ரோ-ஹங்கேரியை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் இருந்தது. ஆனால் இவை அனைத்தையும் விட, ஜெர்மன் பிரான்ஸைத் தாக்கியபின் அதன் கவனம் ரஷ்யாவின் பக்கம் திரும்பினால் அதைச் சமாளிப்பது கடினம் என்பதை உணர்ந்திருந்தது.  எனவே, ஜெர்மன் பிரான்ஸை வீழ்த்துவதற்கு முன் அது ரஷ்யாவுடன் போரிட நேர்ந்தால் ஜெர்மன் தன் முழு படை பலத்தையும் ரஷ்யாவிற்கு எதிராக பிரயோகிக்க முடியாது என்றும் நினைத்தது. அது ஜூலை 30ஆம் நாள் தன் படையை தன் மேற்கு எல்லையில் குவித்தது. ஜெர்மன் வேறு வழியின்றி ஆகஸ்ட் 1 தேதி ரஷ்யாவின் மீது போர் அறிவித்தது.

இந்த சமயத்தில் பிரான்ஸில் ஜூன் மாதத்தில் தான் புதிய பிரதமராக விவியானி பதிவியேற்றிருந்தார். பிரெஞ்சு ராஷ்டிரபதி ரேமெண்ட் பாய்ன்கரெ ரஷ்யாவிற்கு கடற்பயணம் மேற்கொண்டிருந்தார். அதனால், அது உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரஷ்யாவின் படைக் குவிப்பைத் தொடர்ந்து அதுவும் தன் கிழக்கு எல்லையில் படையைக் குவித்தது. ஆகஸ்ட் 3ஆம் தேதி ஜெர்மன் பிரான்ஸின் மீது போர் அறிவித்தது. தொடர்ந்து பிரான்ஸை வடக்கிலிருந்து தாக்க (ஷிலிஃபென் திட்டப்படி) நடுநிலை வகித்த பெல்ஜியத்தின் மீது ஜெர்மனி படையெடுத்தது.

இந்த நேரத்தில் பிரிட்டனின் வெளியுறவுத் துறை செயலராக இருந்தவர் சர் எட்வர்ட் க்ரே. இவர் ஒரு சமாதான விரும்பி. இவர், ஜூலை 29 ஆம் தேதி ஜெர்மன் வெளியுறவுத் தூதரான இளவரசர் லிக்னோவ்ஸ்கி சமாதானத்தின் அவசியத்தை அறிவுறுத்தினார். ஆனால் இவரது கடிதத்தில் மறைமுகமாக பிரான்ஸ் தாக்கப்பட்டால் பிரிட்டன் ஜெர்மனிக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற எச்சரிக்கையும் இருந்த அதே நேரம் பிரிட்டன் தன் நட்பு நாடுகளுக்கு உதவ சட்டபூர்வமாக எந்தத் தேவையும் இல்லை என்றும் கூறியிருந்தார்.  இதை தனக்குச் சாதகமாக திருப்ப ஜெர்மன் முயன்று பிரிட்டன் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்று கூறியது. தன் தவறை உணர்ந்த க்ரே பதில் எதுவும் அளிக்கவில்லை. ஆகஸ்ட் 3-ஆம் தேதி பிரிட்டிஷ் மந்திரி சபைக் கூட்டத்தில் தான் அமைதிக்கான ஒரு வழியை மட்டுமே ஜெர்மனுக்குக் காட்டியதாகவும் வேறு எந்த  வாக்குறுதியையும் வழங்கவில்லை என்று அறிவித்தார். தொடர்ந்து ஆகஸ்ட்-4 தேதி பிரிட்டன் - ஜெர்மனி பெல்ஜியத்தின் மீது படையெடுத்ததையடுத்து  - ஜெர்மன் மீது போர் அறிவித்தது.

உலக வல்லரசுகளான பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மூன்றும் ஜெர்மனிக்கு எதிராக அணிதிரண்டதைக் கண்ட ஜப்பான் ஜெர்மன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சீனப் பகுதிகளை மீட்க ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஜெர்மனியின் மீது போர் அறிவிப்பு விடுத்தது.

இடையே ஜெர்மன் பெல்ஜியம் முழுவதையும் கைப்பற்றியிருந்தது. தொடர்ந்து ஜெர்மன் ப்ரான்ஸ்-இலும் நுழைந்தது. ஜெர்மானியப் படைகளின் முன்னேற்றத்தை ப்ரான்ஸ்-ஆல் சமாளிக்க முடியவில்லை. ஆனால், ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் (17-19 தேதிகள்) ரஷ்ய படைகள் ஜெர்மனியின் கிழக்குப் பகுதி (ப்ரெஷ்யா) ஜெர்மன் அதன் படையின் பெரும் பகுதியை அங்கு அனுப்ப நேர்ந்தது. அங்கு நடந்த போரில் ஜெர்மனி பெரும் வெற்றி பெற்றாலும், பிரான்ஸ் பகுதி முன்னேற்றத்தை அது தடுத்துவிட்டது. ஸெப்டம்பரில் ப்ரான்ஸ் தன் படையை முழுவதும் திரட்டியதையடுத்து மார்னே நதிக்கரையில் ஜெர்மன் தடுத்து நிறுத்தப்பட்டது. இரண்டு தரப்பிலும் பதுங்கு குழிகள் வெட்டப்பட்டு படைகள் முன்னேற முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் கிழக்குப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ரஷ்யப்படைகள் தோற்கடிக்கப்பட்டாலும் ஜெர்மனி ரஷ்யா போன்ற பெரிய நிலப்பரப்புள்ள நாட்டைக் கைப்பற்றுவது சாத்தியமற்றது என்று உணர்ந்திருந்ததால் வேறுவழியில்லாமல் செப்டம்பர் மாத பிற்பகுதியில் போரை கடல் வெளியில் நிகழ்த்த எண்ணியது. இதை, வரலாற்று ஆசிரியர்கள் ‘கடற்பந்தயம்’ (race to sea) என்றழைக்கிறார்கள். ஜெர்மனியின் இந்த முடிவிற்கு முக்கிய காரணம் அதனிடம் இருந்த (U-boat) நீர்மூழ்கிக் கப்பல்கள். இதன் மூலம் அது நேச நாடுகள் தங்கள் காலணிகளுக்கு சென்றுவரும் கப்பல்களை தாக்க ஆரம்பித்தது. போர்கப்பல்களை மட்டுமல்லாமல் பயணிகள் கப்பலையும் தாக்கியது. 1914 டிசம்பரில் போர் ஃபாக்லாண்ட் தீவுகள் அருகில் நடந்த கடற்போர் மிகவும் பிரபலம்.

கடற்போர்களைத் தொடர்ந்து, டிசம்பர் இறுதியில் ஜெர்மனும் பிரிட்டனும் நேரிடியாக போரில் இறங்கின. ஜெர்மன் பிரிட்டனின் மீது வான்வழித் தாக்குதலை ஆரம்பித்து வைத்தது. இதன் மூலம் போர் அடுத்த கட்டத்தை அடைந்தது. 

முதல் கட்டத்தில் நேச நாடுகளின் படைகள் பெரும் இழப்புகளையே சந்தித்தன. அதிலும் குறிப்பாக ரஷ்யா தான் மிக அதிகமான இழப்புகளை அடைந்திருந்தது.

ரஷ்யா செர்பியவிற்கு உதவியதையடுத்து ரஷ்யாவின் எதிரி நாடான துருக்கியின் ஒட்டாமன் அரசு நேச நாடுகளுக்கு எதிராகப் போரில் இறங்கியது. தன் வணிக வாய்ப்புகளுக்கு சூயஸ் பகுதியின் முக்கியத்தை உணர்ந்திருந்த பிரிட்டன் இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தது.

1915-இல், ஒரு பக்கம் சர்ச்சில் தலைமையிலான படை துருக்கியின் காலிபோலி-யில் ஒரு பெரும் சண்டையை நடத்தியது. பிரிட்டன் அதில் பெரும் தோல்வியைச் சந்தித்தது. [தொடர்ந்து சர்ச்சில் பதவியைத் துறந்ததும் அரசியலில் இறங்கியதும் வேறு கதை]. இந்தப் போரில் பிரிட்டனின் காலணிகளான ஆஸ்திரேலிய-நியூஸிலாந்து படையினரே அதிகம் பயன்படுத்தப் பட்டனர்.

மற்றொருபுறம், இந்தியாவிலிருந்து 13லட்சம் வீர்ர்களைக் கொண்ட ஒரு ராணுவ பிரிவு தரைவழியில் துருக்கியைத் தாக்க அனுப்பப்பட்டது. இந்தியப் (பிரிட்டிஷ் அரசிற்காகப் போரிட்டாலும் அதன் வீரர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களே) படை யூப்ரிடஸ்-டைட்ரிஸ் நதிப் பகுதிவரைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. ஆனாலும் அதனால் பாக்தாத்-ஐக் கைப்பற்ற முடியவில்லை. கிட்டத்தட்ட 6-7 மாதங்கள் (அக்-1915 முதல் ஏப்ரல்-1916 வரை) பாக்தாத்-ஐ அடுத்த குட் பகுதியில் முற்றுகையிட்டிருந்த இந்தியப் படையின் 13000-பேர் துருக்கியர்களால் முறியடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

பிரான்ஸுடன் அது ஒட்டமான் அரசைப் பிரித்துக் கொள்ள ரகசியமாக ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. இதற்கு சைக்ஸ்-பைகாட்ஸ் ஒப்பந்தம் என்று பெயர் [இன்றைக்கும் சூயஸ் பகுதியில் நிலவி வரும் பாலஸ்தீனப் பிரச்சனைக்கு விதை பிரிட்டனின் மார்க் சைக்ஸ்-உம் பிரான்ஸின் பிரான்காய்ஸ் ஜார்ஜெஸ் பைகாட்-உம் உருவாக்கிய அந்த ஒப்பந்தத்திலும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளினாலும் தான் விதைக்கப் பட்டது].  இந்த ஒப்பந்தத்தில் பிரான்ஸும் பிரிட்டனும் ஒட்டமான் அரசு வரைபடத்தின் குறுக்கே ஒரு கோடு கிழித்து அதில் வட பகுதியை பிரான்ஸும் தென் பகுதியை பிரிட்டனும் பிரித்துக் கொண்டன. பின்னர் ரஷ்யாவிற்கும் ஓட்டமான் அரசின் வடபகுதியில் சில இடங்கள் ஒதுக்கப்பட்டது.

துருக்கியை ஒடுக்க அவர்களுக்கு அரேபியர்களுடன் இருக்கும் 400-ஆண்டுப் பகையைப் பயன்படுத்திக் கொண்டது. நபிகளின் வழிவந்த, ஷரிஃப் ஹுஸைன் தான் அப்பொழுது மெக்காவை ஆண்டு வந்தவர். ஆனால், ஒட்டு மொத்த உலக முஸ்லீம்களின் தலைவராக (கலீபாவாக) ஒட்டமான் அரசர் இருந்து வந்தார். ஷரிஃப் ஹுஸைனை ஒட்டு மொத்த முஸ்லீம்களின் தலைவராக அறிவிக்க கோரி அவர் மகன் ஃபைஸல் தலைமையில் மறைமுகமாக கொரில்லா போரை நடத்தியது. 1918-இல் ஃபைஸல் தலைமையிலான படை வெற்றி பெற்று டெமாஸ்கஸைக் கைப்பற்றியது.

இடையே கடற்போரில் பிரிட்டனின் கடற்படைகளைத் தாக்கிய ஜெர்மன் 1915 மே மாதத்தில் பிரிட்டனின் பயணிகள் கப்பலான லுஸிதானியாவை மூழ்கடித்தது. அதில் அமெரிக்கப் பயணிகளும் உயிரிழந்தனர். அதனால், அதுவரை நடுநிலை வகித்த அமெரிக்கா நேரடியாகப் போரில் இறங்காவிட்டாலும் ஜெர்மனுக்கு எதிரான அரசியல் நிலையை எடுக்க நேர்ந்தது. தொடர்ந்து 1916-இறுதியில் அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் மீண்டும் தேர்தலில் நிற்க வேண்டியிருந்ததால் ஜெர்மன் கடற்படையை அச்சுறுத்த ஹைதி தீவில் அமெரிக்கக் கடற்படையை நிறுத்தினார். தொடர்ந்து போரிடும் இரு தரப்பினரிடமும் அமைதி ஒப்பந்தத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

1917 ஜனவரியில் நேசநாடுகள் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளித்தன. ஆனால், ஜெர்மன் தன் கடற்தாக்குதலை மேலும் தீவிரப் படுத்தியது. அதனால், அமெரிக்கா ஜெர்மனுடனான தன் ராஜீயத் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டது.

இடையில் 1917-மார்ச்சில் பிரிட்டன் பாக்தாத்-ஐக் கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த சண்டைகளில் வெற்றி தோல்வி இரு தரப்பினரிடையேயும் மாறிமாறி கிட்டி வந்தது. எனினும், ரஷ்யா மட்டும் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்தது. ரஷ்யாவின் தொடர் தோல்விகளையும் அப்போதையப் பஞ்சத்தினால் ஏற்பட்ட உணவு பற்றாக் குறையையும் தொடர்ந்து அரசுக்கு எதிராகப் புரட்சி வெடித்தது; ஜார் இரண்டாம் நிக்கலோஸ் தலைமறைவாக இடைக்கால அரசு பதவியேற்றது. பின்னர், நாடு கடத்தப்பட்டிருந்த  லெனினின் வரவால் நவம்பர் புரட்சி வெடித்து சோவியத் அரசு நிறுவப்பட்டது வரலாறு.

பொதுவாக வரலாற்று ஆசிரியர்கள் ஜெர்மனியையே போருக்குக் காரணமாகக் கூறினாலும். பிற்காலத்தில் ஆஸ்த்ரிய-ஹங்கேரி மீதும், ரஷ்யா மீதும் ஓரளவிற்கு செர்பியா மீதும் காரணம் காட்டுகிறார்கள். பொதுவாக, இந்தப் போரை அந்த நேரத்தில் இதில் ஈடுபட்ட ஐரோப்பிய அரசுகள் மட்டுமன்றி அன்றைய ஐரோப்பிய மக்களும் விரும்பினர் என்றே கூறலாம். ஐரோப்பிய மக்கள் போர் அறிவிப்பையும் போர் சம்பவங்களையும்  விழாப்போலக் கொண்டாடினர். இந்தப் போரின் ஆரம்பத்தில் இதை எல்லாப் போர்களையும் தீர்த்து வைக்கும் பெரும்போர் என்றே ஊடகங்களும் இதை வர்ணித்தன.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே இந்தப் போரின் கோரத் தன்மையையும் அது காலங்காலத்திற்கும் ஏற்படுத்திய விளைவுகளையும் மக்கள் உணர்ந்தனர்.

இந்தப் போரின் விளைவே பிற்காலத்தில் இருபது ஆண்டுகளுக்குள் இதைவிட பெரிய ஒரு போருக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதையும் அவர்கள் அப்போது கணிக்கவில்லை.

திங்கள், ஜூலை 28, 2014

முதல் உலகப் போர் – நூறு ஆண்டுகளுக்குப் பின்


Never think that war,

          No matter how necessary, nor justified,

                   Is not a Crime

                             - Ernest Hemigway

 

[என்னதான் தேவை என்று நிறுவினாலும் எவ்வளவுதான் ஞாயப்படுத்தினாலும், போர் குற்றமற்றது என்று எண்ணிவிடக் கூடாது]

 

1914-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் நாள்...

ஐரோப்பாவின் ஆஸ்திரிய-ஹங்கேரி அரசு செர்பியாமீது போர் அறிவித்தது. ஆஸ்திரிய-ஹங்கேரிக்கும் செர்பியாவிற்கும் இடையே போர் ஆரம்பித்தாலும் சில நாட்களிலேயே அது ஐரோப்பா முழுவதும் பரவி மெல்ல மற்ற நாடுகளும் பங்கெடுக்க நேர்ந்தது. இரண்டாம் உலகப் போர் அளவிற்கு இல்லாவிடினும் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் (ஸ்கேண்டிநேவியா,ஸ்விட்சர்லாண்ட், நெதர்லாண்ட்(ஹாலந்து) தவிர்த்த அனைத்து ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்க, ஆசியாவின் முக்கிய நாடுகளும், ஆஸ்த்ரேலிய-ந்யூசிலாந்து நாடுகளும் பங்கு பெற்றன. இந்த போர் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேல் நீடித்து 1918-ஆம் ஆண்டு நவம்பர் 11மணிக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட வரை நீடித்தது.

போருக்குக் காரணமான முக்கிய நிகழ்வாக ஜூன் 28,1914அன்று ஆஸ்த்ரிய-ஹங்கேரியின் பட்டத்து இளவரசான Archduke - (51-வயது!) ஃப்ரன்ஸ் ஃபெர்டினண்ட்-உம் அவர் மனைவி ஸோஃபி சோடெக்வான்-உம் செர்பியாவின் கருங்கை (The Black Hand) இயக்கத்தைச் சேர்ந்த கார்விலோ ப்ரின்சிப்-என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டதே.

இதற்குக் காரணம் என்ன? இது எப்படி உலகப் போருக்கு வழி வகுத்திருக்க முடியும்? என்ற கேள்விகள் எல்லாம் மனதில் எழும். இதன் பின்னணியைச் சற்று பார்ப்போம்.

பொதுவாக இந்த சம்பவத்தினால் ஆஸ்த்ரிய-ஹங்கேரி செர்பியா (ஆஸ்த்ரிய-ஹங்கேரியின் தெற்கில் க்ரேக்கத்திற்கு வடக்கில் அமைந்த ஐரோப்பிய நாடு)மீது தாக்குதல் தொடுக்க செர்பியாவை ஆதரிக்கும் ரஷ்யா செர்பியாவிற்கு உதவக் கூடாதென ஆஸ்திரிய-ஹங்கேரியின் நட்பு நாடான ஜெர்மனி ரஷ்யாவை தாக்கியது. இதுதான் இந்த உலகப் போருக்கான துவக்கம் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது.

ஆனால்,இந்த உலகப் போருக்கான தீப்பொறி இதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்னறே விழுந்துவிட்டது.

இந்தப் போருக்கான காரணங்களாக நான்கு விஷய்ங்களைக் குறிப்பிடுகிறார்கள். அவை

 

தேசபக்தி; இல்லை இல்லை தேசவெறி;

ஆதிக்க வெறி

நட்புறவு

படை குவிப்பு  - ஆகியவையே

 

தேசபக்தி

ஓரினம் மற்றும் ஒரே மொழி பேசுபவர்கள் என்பதால் ஜெர்மனிக்கு ஆஸ்த்ரிய-ஹங்கேரியை எப்பொழுதும் சகோதரநாடாகவே கருதும். ஆஸ்த்ரிய-ஹங்கேரியினரும் தங்களை ஜெர்மனியின் ஓர் அங்கமாகவே கருதி வந்தனர். மற்றொருபுரம் செர்பியா சிறுநாடாக இருந்தும் போஸ்னியா, க்ரொஷியா, செர்பியா போன்ற பல இனக்குழுக்களை கொண்டது. அதில் பால்கன்பகுதியின் (ஆஸ்த்ரிய-ஹங்கேரியின் தென்பகுதியை எல்லையாகக் கொண்ட செர்பியாவின் வடமேற்கு பகுதி) பொஸ்னியா இனக்குழு தங்கள் இனத்தைச் சேர்ந்தவர் என்று ஆஸ்திரிய-ஹங்கேரி கருதியது. இதற்கு அடிப்படைக் காரணம் ஜெர்மனி. அதிலும் முக்கியமானது ஜெர்மனியின் இரும்பு மனிதன் என்று அழைக்கப்பட்ட சான்சிலர் ஓட்டோ வான் பிஸ்மார்க்-இன் ராஜதந்திரம். நெப்போலிய போரினால் துண்டுதுண்டாக இருந்த ஜெர்மனியை  இணைத்து ஒரு பெரிய அரசை நிறுவ நினைத்தார். அதற்கு அவர் எடுத்து வைத்த கோஷம் ஒன்றுபட்ட  ஜெர்மானிய தேசம் என்பது தான். ஜெர்மனி ஒன்று சேர இத்தேசிய கோஷம் தேவையாக இருந்தது.அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதற்கேற்ப, மெல்ல இதன் மூலம் அருகிலிருக்கும் மற்ற நாடுகளையும் தன்னுடன் இணைக்க முற்பட்டது. அத்தேசிய உணர்வை ஆஸ்த்ரிய-ஹங்கேரியிலும் பரப்பி அவர்களையும் ஜெர்மனியின் ஓர் அங்கமாக உணரவைத்தது. அதே அடிப்படையில் அது போஸ்னியாவையும் தன்னுடன் இணைக்க நினைத்தது. அதேநேரம் தான் நேரடியாக ஈடுபடாமல் ஆஸ்த்ரிய-ஹங்கேரியை இறக்கியது. ஆஸ்த்ரியா-ஹங்கேரியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போஸ்னியாவை முழுவதுமாக தன்னுடன் இணைக்க ஒரு அரசு முறை பயணம் உதவும் என்று எண்ணியதால் தான் ஃபெர்டினண்ட் போஸ்னியாவின் தலைநகரான ஹெர்ஸெகோவினா-விற்கு சென்றார். முதலில் க்ரனெய்ட் குண்டு தாக்குதலில் தப்பித்த அவர், மதியம் காயமடைந்த வீரர்களைக் காண மருத்துவமனை சென்ற போது தான் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆக இந்த தேசியவெறி உலகப் போருக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

ஆதிக்க வெறி

19-20 ஆம் நூற்றாண்டுகள் ஐரோப்பின் முழுவது தொழிற்புரட்சி நடந்த காலம். ஐரோப்பிய் நாடுகள் அனைத்தும் உலகளவில் தங்கள் பொருட்களுக்கான கச்சாப் பொருட்களை தேடியலைந்து பலநாடுகளைத் தங்கள் அடிமை நாடுகளாக் ஆக்கி காலனிஆதிக்கம் செலுத்திவந்தன. இந்த காலனி ஆதிக்க வெறி அவர்களை ஒருவருக்கொருவர் எதிரிகளாக மாற்றியிருந்தது. ஐரோப்பாவின் அப்போதைய மூன்று பெரிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். பிரிட்டன், பிரான்ஸ் இரண்டும் பெரிய கடல் எல்லைகளைக் கொண்டவை. பிரிட்டன் ஐந்து கண்டங்களிலும் தனது காலனிகளாக பல நாடுகளைக் கொண்டிருந்தது. அதன் போட்டி நாடான பிரான்ஸ் ஆப்பிரிகாவின் பல நாடுகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. இவை ஐரோப்பாவில் மட்டுமன்றி தங்கள் காலனி நாடுகளிலும் பல மோதல்களை செய்தன. [இந்தியாவின் மூன்று கர்நாடக போர்களும், பிளாஸிப் போரும் ஆர்காடு சிராஜ் உத்தல்லா, திப்பு சுல்தான், கான் சாஹிப் (மருதநாயகம்!) என்று சொல்லிக் கொண்டே போகலாம்].  எனவே, தன் எதிரியான பிரான்ஸ் வளரக் கூடாதென பிரிட்டன் ஜெர்மனியின் வளர்ச்சிக்கு மறைமுகமாக ஆதரவளித்து வந்தது. ஆனால், ஜெர்மனோ பிரான்ஸைப் போலவே பிரிட்டனையும் தனக்குப் போட்டியாகக் கருதியது. காரணம், அதனிடம் நீண்ட கடல் பிரதேசம் இல்லை. இதனால், காலணி ஆதிக்கப் போட்டியில் அது மெதுவாகத்தான் இறங்க முடிந்தது. அதனால், அது ஐரோப்பாபின் பெரும்பகுதியை தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயன்றது. பிரிட்டன் பிரான்ஸ் மோதலில் இந்தியாவில் பிரிட்டன் வெற்றி பெற்றிருந்தாலும் - மற்ற இடங்களில் பிரான்ஸின் கை ஓங்கியிருந்தது.  அதனால், 1904-இல் மொராக்கோவை பிரிட்டன் பிரான்ஸிடம் ஒப்படைத்தது. போட்டியின் காரணமாக ஜெர்மன் மொராக்கோவிற்கு சுதந்திரம் தரவேண்டும் என வலியுறுத்தியது. 1908-இல் ஆஸ்திரிய-ஹங்கேரியைத் தூண்டி போஸ்னியாவை கைப்பற்ற வைத்தது. கேள்வி கேட்ட நாடுகளுக்கு பிரான்ஸ் மொராக்கோவை கைப்பற்றியிருப்பதைக் காரணம் காட்டியது. இந்த காலணி ஆதிக்க வெறியும் போருக்கு முக்கிய காரணம்.

நட்புறவு

காலணி ஆதிக்க வெறியும் தேசிய வெறியும், ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளை ஒருவருக்கொருவர் நம்ப முடியாத நிலையையும் அதே நேரம் தன் ஒரு எதிரியைத் தாக்க மற்றவரின் உதவியை கைக்கொள்ள வேண்டிய நிலையையும் தந்தது. தன் முதன்மை எதிரியான பிரான்ஸின் வளர்ச்சியைத் தடுக்க அதன் கிழக்கு எல்லையில் இருக்கும் ஜெர்மனுக்கு மறைமுக உதவி செய்துவந்த பிரிட்டன், அதே ஜெர்மனி வளர்ந்து அதன் கடல் வாணிபத்திற்காக தன் கப்பல்களைத் தாக்கும் சாத்தியத்தை உணர்ந்த பிரிட்டன் ஜெர்மனியைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தது. மேலும், பல காலணி நாடுகளில் பிரான்ஸுடன் நடந்து வந்த போரின் இழப்பையும் கணித்த பிரிட்டன் பிரான்ஸுடன் சமாதானம் செய்து கொண்டது. ஜெர்மனியின் மெற்கு எல்லையில் இருக்கும் பிரான்ஸுடன் சமாதானம் செய்து கொண்டது போல் ஜெர்மனியின் கிழக்கு எல்லையின் மிகப்பெரிய நாடான ரஷ்யா அரசுடனும் சமாதானம் செய்து கொண்டது. 1907-ஆம் ஆண்டு ரஷ்யா, ப்ரான்ஸ், பிரிட்டன் ஆகிய மூன்றும் ஜெர்மனியின் நாடு பிடிக்கும் கொள்கைக்கு எதிராக முக்கூட்டு ஒப்பந்த செய்து கொண்டன; இவை நேச நாடுகள் என்று அழைக்கப்பட்டன. மற்ற மூன்று நாடுகளாக முதலில் ஜெர்மன், ஆஸ்த்ரிய-ஹங்கேரி, இத்தாலி ஆகிய நாடுகள் இருந்தன. இவை மத்திய கூட்டணி என்று அழைக்கப்பட்டன. பின்னர், இத்தாலி இந்த கூட்டணியிலிருந்து விலகி நேச நாடுகளுடன் சேர துருக்கியின் ஒட்டமான் அரசு மத்திய கூட்டணியில் இணைந்தது. [இடையில் 1881-ஆம் ஆண்டு முக்கூட்டு ஒப்பந்தத்திலிருந்து இத்தாலி விலகிய போது ஜெர்மன், ஆஸ்த்ரிய-ஹங்கேரியுடன் ரஷ்யா இணைந்தது; பின்னர் ரஷ்யா விலகிக் கொண்டாலும். பிஸ்மார்கின் சாணக்கியத் தந்திரத்தால் ரஷ்யா நடுநிலை வகிக்க ஒப்புக் கொண்டிருந்தது வேறுகதை] பிஸ்மார்க் இருந்த வரை அவர் தன் ராஜதந்திரத்தால் பல்வேறு அழுத்தங்களுக்கிடையே இருந்த ஐரோப்பாவின் அமைதியைக் காத்து தான் வந்தார். 1890-இல் அவர் நீக்கப்பட்டபோது சரியான திட்டங்கள் ஏதுமில்லாமல் கூட்டணிகள் வெவ்வேறு விதமாக மாறிவந்தன. இது போன்ற விநோதக் கூட்டறவு ஒப்பந்தங்களால் ஒரு நாடு ஆரம்பித்து வைத்த போரில் மற்ற நாடுகளும் மாறி மாறி இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மகாபாரதத்தில் பாண்டவ கௌரவர்களுக்காக மற்ற அரசர்களும் போர்களத்தில் இறங்கியது போல் உலக நாடுகள் அனைத்தும் களமிறங்க நேர்ந்தது.

படை குவிப்பு 


மெல்ல மெல்ல ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டைத் தாக்க ஏதாவது ஒரு காரணம் தேடிக் கொண்டே இருந்தன. எப்படியும் ஒரு போர் உருவாகும் என்று காத்திருந்து அதற்காக ஆயுதங்களை சேகரித்தும் படைக்குவிப்பு செய்தும்  காத்துக் கொண்டிருந்தன.
 
இந்தப் போரின் நிகழ்வுகளை அடுத்த பதிவில் பார்ப்போம்

வியாழன், ஜூலை 03, 2014

பஞ்சசீலக் கொள்கையும் சீன ஒப்பந்தமும்


பஞ்சசீலக் கொள்கையும் சீன ஒப்பந்தமும்

 

இது என்ன ஒப்பந்தத்தின் பின்னணி தான் என்ன?

 

இதன் துவக்கம் 1904-ஆம் ஆண்டு நடந்த லாசா மாநாட்டில் சீனா அம்பன் (அலுவலகர்/தூதுவர்) முன்னிலையில் இந்திய நேபாள அலுவலகரிடையே நடந்த ஒப்பந்ததிலிருந்து ஆரம்பித்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு (பிரிட்டிஷ் ஆட்சியில்) திபெத்தில் க்யாண்ட்ஸே, கர்டோக், யார்துங் ஆகிய இடங்களில் வணிகத்தளம் அமைக்க அனுமதிக்கப்பட்டது. 1910-ஆம் ஆண்டு இந்திய (பிரிடிஷ்) அரசு சிக்கிம்-க்யாண்ட்ஸே வழித்தளத்தில் 11 ஓய்வு இல்லங்களும் தொலைதொடர்பு வசதியும் கட்டமைத்தது.

 

1908-ஆம் ஆண்டு பிரிட்டன், சீனா, திபெத் ஆகியவற்றிடையே திபெத் வணிக நியதிகள் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இதிலிருந்து சீனா திபெத்தின் மீது உரிமை கொண்டாடுவது அடிப்படையற்றது என்பது விளங்கும். தவிர, 1914-ஆம் ஆண்டு சிம்லாவில் நடந்த மாநாட்டில் பிரிட்டன், சீனாவையும் திபெத்தையும் அழைத்து தங்களின் எல்லைகளை முடிவெடுக்கப் பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த ஒப்பந்தகளின் அடிப்படையிலேயே திபெத் ஒரு தனி நாடு என்பது விளங்கும்.

 

ஆயினும், பிரிட்டன் திபெத் தனித்து இயங்குவதை விரும்பவில்லை. காரணம், 1902-ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஜார் அரசு மங்கோலியாவை பிடித்தது. தொடர்ந்து ஜார் நிகோலஸுக்கு திபெத்-ஐயும் பிடிக்கும் எண்ணம் எழுந்தது. மங்கோலிய புத்த துறவி டோர்ஜிவ் சீன ஆக்கரமிப்பைத் தடுக்க நிகோலஸுக்கு ஆதரவாக இருந்தார். [ஜார்களின் வீழ்ச்சிக்குப் பின்னரும் ரஷ்யா ஸ்டாலின்-இன் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை டோர்ஜிவ் லெனினின் கம்யூனிஸ்ட் ரஷ்யாவிற்கு ஆதரவாகவே இருந்தது தனி கதை.]  டோர்ஜிவ்-உம் தலாய் லாமா-வும் நண்பர்கள். திபெத் தனி நாடாக இருக்கும் பட்சத்தில் அது ரஷ்யாவிற்கு ஆதரவு அளிக்க வாய்பிருந்ததாக பிரிட்டன் கருதியது. அதை தடுக்க தான் நேரடியாக இறங்காமல் சீனாவை முன் நிறுத்த எண்ணியது. அதனால், சீனா திபெத்தின் மீது உரிமை கொண்டாடியதை கண்டுகொள்ளாமல் விட்டது. மேலும், திபெத் மீதான சீனாவின் கட்டுப்பாட்டு உரிமையை (suzerainty)யை பிரிட்டன் ஏற்றுக்கொண்டது. 1914-ஆம் ஆண்டு நடந்த எல்லை ஒப்பந்தத்தில் பிரிட்டன் (இந்தியா), சீனா, திபெத் ஆகிய  நாடுகளின் அலுவலகர்கள் கையொப்பமிட்டாலும். சீனா அந்த ஒப்பந்தத்தை உதாசீனப்படுத்தியது. அதனால், பின்னர் பிர்ட்டன் திபெத்துடன் தனி ஒப்பந்தம் செய்து கொண்டது.

 

1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்றதும் லாசாவின் பிர்ட்டிஷ் தூதரகம் இந்திய தூதரகமாக இந்தியக் கொடியுடன் இயங்கினாலும் அதன் தூதுவராக ஹக் ரிசர்ட்சனே தொடர்ந்தார்.

 

1949-ஆம் ஆண்டு நேரு சீன அரசிற்கு எதிராக கம்யூனிஸ்ட் சீனா-வை ஆதரித்தார். சீன அரசு தன் குறிக்கோளில் நிலையாக நின்று திபெத்தின் மீது முழு உரிமைக் கொண்டாடியது. பின்னர், 1950-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீனா கம்யூனிஸ்ட்கள் வசம் வந்த போது கம்யூனிஸ்ட்களின் மக்கள் விடுதலை ராணுவம் திபெத்திலும் நுழைந்து அதை தன் வசப்படுத்தியது. 1951-இல், திபெத் கம்யூனிஸ்ட் சீன அரசுடன் ஓர் ஒப்பந்தம் செய்தது. அதில், சீனா தலாய்லாமா-வை திபெத்தின் சமயத் தலைவராகவும் திபெத்-இன் உள் விவகாரங்களைத் தீர்மாணிக்க  வழி வகுத்தது.

 

1954-ஆம் ஆண்டு நேரு திபெத்துடன் தனி வணிக ஒப்பந்தம் செய்ய தலைப்பட்டார். அதே நேரம் அதற்கு சீனாவின் சம்மதமும் பெற நினைத்தார். அதற்காக, சீனாவிற்கு ஒரு குழுவை அனுப்பி வைத்தார்; அதே நேரம் சீனாவுடன் தங்களிடையே இருக்கும் எல்லை (லடாக் மற்றும் அருணாசலபிரதேச) பிரச்சனைகளைப் பற்றி சீனாவே விரும்பினாலன்றி விவாதிக்க விரும்பவில்லை. அந்த குழு சீனாவில் நான்கு மாதங்கள் தங்கியிருந்து ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. அந்த ஒப்பந்தம் ஐந்து கொள்கைகளை அடிப்படையாக்க் கொண்டு அமைக்கப்பட்ட்து. அவையே பஞ்சசீலக் கொள்கைகள்.

 

பஞ்சசிலம் என்றால் ஐந்து வழிமுறைகள் அல்லது ஒழுக்கங்கள். அந்த வழிமுறைகள் தான் யாவை?

1. ஒரு நாட்டின் தனித்துவ கௌரவத்தையும், அரசாங்க அதிகாரத்தையும் மற்ற நாடுகள் மதிக்க வேண்டும். இரண்டு நாடுகளும் கொள்கை வேறுபட்டனவேனும், சமாதானமாக வாழவேண்டும்.

2. எந்த நாடும், பிற நாட்டை ஆக்கிரமிக்கத் தாக்கக்கூடாது.

3. ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில், பிற நாடுகள் தலையிடக்கூடாது.

4. ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுடன் அமைதியான முறையில் இணங்கி, சமமதிப்பு கொடுத்தல் வேண்டும்.

5. ஒவ்வொரு நாடும் பிற நாடுகளின் ஒற்றுமையையும், இறையாண்மையை மதிக்க வேண்டும்.

 

கொள்கை அடிப்படையில் மேற்கூறிய ஐந்தும் முக்கியமானவையே. ஆனால், ஒப்பந்த ஷரத்துகளில் இந்தியா, திபெத்தின் மீதான சீனாவின் முழுஉரிமையை (sovereignty) முதன்முதலில் அங்கீகரித்தது. இதன் மூலம் திபெத்-இன் தனித்தன்மையை இந்தியா விட்டுக் கொடுத்தது. திபெத்தில் க்யாண்ட்ஸே, கர்டோக், யார்துங் ஆகிய இடங்களில் இருந்த வணிகத்தளம் மற்றும் தொலைத் தொடர்பு மையங்களையும் இந்தியா விட்டுக் கொடுக்க நேர்ந்தது.

 

இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகள் வரை நிலைத்திருந்தது. பின் 1962-ஆம் ஆண்டு இந்திய-சீன போருக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவேயில்லை. தற்போது இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன.

 

இடையில் நேரு இந்த பஞ்சசீல கொள்கையை உலகலாவிய அளவில் எடுத்துச் சென்று நாடுகளுக்கிடையே வெளியுறவு ஒப்பந்தகள் இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே  இருக்க வேண்டுமென முயன்றார். 1958-ஆம் ஆண்டிற்குள் முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் பஞ்சசீலக் கொள்கைகளை ஏற்றன.

 

தற்போது இந்திய வெளியுறவுக் கொள்கைகள் இதன் அடிப்படையிலேயே வகுக்கப்படுகின்றன.

 

இந்நிலையில், சீன பஞ்சசீல ஒப்பந்தத்தின்  60-ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு அன்சாரி கலந்து கொண்டுள்ளார்.

 

பஞ்சசீலக் கொள்கையின் 60 ஆண்டு விழாவாக இருந்தால் இந்தியா இதைக் ஏன் கொண்டாடவில்லை?

 

ஒப்பந்தத்தின் 60-ஆண்டு நிறைவு விழா என்றால், ஒப்பந்தம் நிலுவையில் இல்லாத நிலையில், போர் நடந்து 50 ஆண்டுகள் ஆன பின்பும் எல்லைகள் பிரச்சனைத் தீர்க்கப்படாத நிலையில் சீனா கொண்டாடும் இந்த 60-ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் இந்தியா கலந்து கொள்வது வேதனை தரும் வேடிக்கையாக உள்ளது!